செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

சுதந்திர தின கவிதை ஆகஸ்ட் 15


சுதந்திர தின கவிதை ஆகஸ்ட் 15.
 """""'''''''''"""""""""
கைச்சரக்கை விற்று
காசு பார்க்க
வணிகமென்ற பெயரில்
வந்ததொரு கூட்டம்

ஊருக்கொரு அரசு
வீதிக்கொரு மதம்
ஆளுக்கொரு சாதியென
ஊரே இரண்டுபட்டுக் கிடக்க
கூத்தாடிக்குக் கொண்டாட்டமானது

வந்தவன்
வந்த வேலையை பார்க்காது
சொந்தங்களுக்குள்
சிண்டு முடிந்தான்

சண்டையிட்டு
சண்டையிட்டே
மண்டை பிளந்த
மண்டூகங்களோடு
கூட்டு வைத்தான்
குழி பறித்தான்

குழியில் விழுந்த
குதிரைகளை கொண்டே
சதிராட்டமாடி
சதுரங்க வேட்டையில்
அரசுகள் சில
பரிசென பெற்றான்

சிற்றரசை
பேரரசாக்கி - விக்டோரியா
பிரகடனம் செய்தான்

இந்தியா
இங்கிலாந்திற்கு அடிமையென
அறைகூவி நின்றான்

அண்ணனுக்கும்
தம்பிக்குமான
யார் பெரியவனெனும்
அக்கப்போரில்
யாரோ ஒருவன்
பெரியவனானான்

அண்ணனும்
தம்பியும்
சிறியவனானான்
அவன் முன்னால்
அறிவில்
வறியவனானான்

எதிர்த்தவனின் குரல்வளையெலாம்
மிதித்தே நொறுக்கப்பட
எது நடந்தாலும் ஊமையானான்
ஐந்தடக்கி  ஆமையானான்

நாடெனது
நட்ட விதையெனது
இட்ட உழைப்பெனது - எனினும்
கண்ட விளைச்சலில் மட்டும்
பங்கு கேட்டான்
மாட்டேனென்பவனுக்கு
சங்கு வைத்தான்

இமைகள் உணர்ந்து
உதிர்த்தன - கண்ணீரையும்
வெந்நீராய்

மங்கிலாத மனமெலாம்
விடுதலையெனும்
கங்கு பற்றியது

எனை
சுட்டுக்  கொல்(ள்)
தூக்கிலிடாதே

மரணித்தாலும்
மண்ணோடு என் மேனி
தொட்டுக் கிடக்கட்டுமென
வீர முழக்கமிட்ட
பகத்சிங்கின் மரணத்தால்
நாடெல்லாம் - இதுவென்
தாய்நாடென்றது

வெள்ளையன்
வந்து நின்ற தெருவெல்லாம்
வந்தேமாதரமென்றது
தடியடிபட்டும்
கொடி பிடித்து செத்தது

பீரங்கிகளை
நெஞ்சில் வைத்தாலும்
அஞ்சா நெஞ்சொடு
வெள்ளங்கி உடுத்தி
வந்தேமாதரமென மார்தட்டி
சத்தியாக் கிரகம் செய்தான்
சத்தியவானாம் காந்தி

வெய்யோன்
விழுவதானாலும்
எழுவதானாலும்
எமை கேட்டே
விழும்
எமை கேட்டே
எழும் என இறுமாப்பாய்
இயம்பிய வெள்ளையன்
திரும்பிய திசையெலாம் - தன்
அகிம்சை முகம்காட்டி
நின்றான்
காந்தியெனும்
சூரிய காந்தி

பீரங்கிக்கு
பீரங்கியென
பரங்கியனுக்கெதிராய்
படை நடத்த
புறப்பட்டதொரு புயல்
நேதாஜியெனும் பெயரோடு

வெள்ளையன்
வேண்டாமென்றவன்
வெள்ளையன்
விற்ற பொருளும்
வேண்டாமென விலக்க
தீக்கிரையாகி
தீயாய் நின்றது
சுதேசி

கதராடை அணிந்தவன்
கப்பலும் மிதக்கவிட்டு
கப்பலேறி வந்தவனை
கலங்க விட்டான்

ஆணென்றும்
பெண்ணென்றும் பாராது
அனைவர்க்கும் பொதுவென
மாதரும் வீதியிறங்க
மண்ணெல்லாம் தீயானது
விண்ணிலும் எதிரொலித்தது
வந்தேமாதரமெனும்
வீர முழக்கம்

எதிர்ப்பு பலமாக
எதிராளி
இறங்கிவந்தான்
ஏற்றிய கொடியை
இறக்கிக் கொண்டான்

யூனியன் ஜாக்
இறங்கிய கம்பத்தில்
மூவர்ணக் கொடி
முழு உரிமையோடு
ஏறியது

சுதந்திரம் வந்தது
நீயும்
நானும்
சரிநிகர் சமமென
சாதியொழித்து
படித்தோம்

ஆயினும்
ஆண்டுகள் எழுபது
கண்ட பின்னும்
இரவினில் சுதந்திரம்
வாங்கிவிட்டோம்
இன்னும் அதனால்
விடியவில்லையென்றே
எழுதித் திரிகிறோம்

விடியலை நோக்கி
நடைபோட
நடத்திட முனைவோம்
இன்னொரு
சுதந்திர போராட்டம்

வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!!
வந்தே மாதரம்!!!

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக